மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில், 1990ம் ஆண்டு அகதிகளாக தஞ்சமடைந்திருந்தவர்களில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு
காணாமல் ஆக்கப்பட்ட 176பேரின் நினைவுதினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம்
இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும்
கலந்து கொண்டனர்.
இதன்போது சர்வதேச நீதிப்பொறிமுறையின கீழ் காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப்பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் ஒன்றும்
முன்னெடுக்கப்பட்டது.
‘வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோரில் முதல் பெயரே இலங்கை நீதிதேவதைதான்’, ‘எமது உறவுகள் எமக்கு வேண்டும்’, ‘எமக்கு சர்வதேச விசாரணைவேண்டும்’, ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே’, ‘இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் நீதிக்காக போராடவேண்டும்?’, ‘எமக்கு நீதியான விசாரணை வேண்டும்’ போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளையும்
போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
காணமால் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மெழுகுவர்த்தி ஏற்றி
அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
1990 ஆண்டு நடுப்பகுதியில் இலங்கை அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் ஊக்கிரமடைந்த நிலையில் உயிர் அபாயம் காரணமாக,
கிழக்குப் பல்கலைக்கழக முகாமில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.
இதன்போது படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்களின் பின்னர் மீண்டும் ஒரு சுற்றிவளைப்பில் 18பேர் கொண்டுசெல்லப்பட்டு அவர்களும் காணாமல்ஆக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.