யாழ்ப்பாணம், பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்கு நடாத்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவை மீண்டும் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆண்டுவரை இடம்பெற்ற பேருந்து சேவை பேருந்து இன்மை, மற்றும் சாரதிகள் இன்மை போன்ற காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் இரவு 7:15 இற்கு கீரிமலையில் இருந்து மீண்டும் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சாலை முகாமையாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
குறித்த பேருந்து கீரிமலையிலிருந்து புறப்பட்டு காங்கேசன்துறை, தொண்டைமனாறு, வல்வெட்டித்துறை ஊடாக பருத்தித்துறையை இரவு 9:00 மணிக்கு வந்தடைந்து, பருத்தித்துறையிலிருந்து மந்திகை, மாலிசந்தி, நெல்லியடி, துன்னாலை ஊடாக வவுனியா, அனுராதபுரம், புத்தளம், சிலாபம் வழியாக கொழும்பை சென்றடையவுள்ளது.