கூட்டமைப்பு: ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி

0
240

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், புதிய கட்சிகளை இணைத்துக்கொண்டு, எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில், இன்று, முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து, முடிவை அறிவித்துள்ளன.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில், இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து, விசேட ஊடக சந்திப்பில், கட்சிகளின் தலைவர்களால் அறிவிக்கப்பட்டது.
இன்று காலை ஆரம்பான சந்திப்பில், சின்னம் தொடர்பான இழுபறி காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர், இடை நடுவில், கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
விக்னேஸ்வரனின் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் சிவநாதனும் வெளிநடப்பு செய்தார்.
கலந்துரையாடலில் பங்கேற்ற சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளின், ஜனநாயகப் போராளிகள் கட்சியை கூட்டமைப்பில் சேர்ப்பதை கண்டித்ததுடன், அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
பின்னதாக, மிக அண்மையில் பதிவு செய்யப்பட்ட, தனது தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியின், மான் சின்னத்திலேயே, தேர்தலில் போட்டியிட வேண்டும் எனவும், அல்லது உருவாக்கப்படும் கூட்டமைப்புக்கு, தன்னை பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததாகவும், அதனை ஏனையவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததைத் தொடந்து, கூட்டத்திலிருந்து வெளியேறியதாகவும், எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதன் பின்னர், மீதமிருந்த ஏனைய கட்சிகள் உடன்பாட்டுக்கு வந்து, கூட்டாக செயற்பட முடிவு செய்யப்பட்டது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி, உள்ளுராட்சி தேர்தலில் தனியாக போட்டியிட முடிவெடுத்த பின்னர், ஏனைய தமிழ் தேசிய கட்சிகளை இணைத்து, புதிய கூட்டணி உருவாக்கப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
அத்துடன், வடக்கு கிழக்கில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக ஆராய்ந்து, நாளை காலை 10.00 மணிக்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என, தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.