
கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மூன்றாவது நாளாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனிடையே மனித புதைகுழி காணப்படுகின்ற முழு பகுதி தொடர்பிலான தகவலை அறிவதற்காக களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரால் விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் எதிர்வரும் 24ஆம் திகதி சோதனை நடைபெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா நேற்று தெரிவித்திருந்தார்.
கடந்த செப்ரெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் 15 வரை முன்னெடக்கப்பட்ட பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் அகழ்வுப்பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 19 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், விடுதலைப்புலிகள் பயன்படுத்திய இலக்கத்தகடு, துப்பாக்கி ரவைகள், மற்றும் அவர்களின் உடைகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.