“இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிச் செயற்பாடுகள் தொடர்பில் சட்ட திருத்தங்களை மாத்திரம் மேற்கொண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியாது. இந்தியா எமது நட்பு நாடு என்ற ரீதியில் இரு தரப்பு இராஜதந்திர உறவுகளையும் கவனத்தில்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.”
- -இவ்வாறு நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“வடக்கு கடல் எல்லையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிச் செயற்பாடுகள் நீண்டகால பிரச்சினையாகக் காணப்படுகின்றது. நீதி அமைச்சு நேரடியாக தலையிட்டு இந்த விடயங்களைத் தீர்க்க முடியாது.
மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகள் குறித்து இலங்கை கடற்படை, வெளிவிவகார அமைச்சு மற்றும் மீன்பிடித்துறை அமைச்சு ஆகியவற்றின் தலையீட்டுடனே இதனை முன்னெடுக்க முடியும்.
எனினும், இவர்களுடன் பேச்சு நடத்த நாம் எதிர்பார்கின்றோம். மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இது குறித்து பேசவுள்ளோம். அவசியமான சட்ட திருத்தங்களை செய்ய வேண்டும் என்றால் அதனையும் கலந்துரையாடல் மூலமாக முன்னெடுக்கத் தயாராகவுள்ளோம்.
சட்ட திருத்தங்களை மாத்திரம் செய்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியாது. இராஜதந்திர உறவுமுறையும் இதில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்தியா எமது நட்பு நாடு, அவர்களுடன் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன என்றால் அது குறித்து ஆரோக்கியமாக கலந்துரையாடியே பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தன்னிச்சையாக எம்மால் இந்த விடயங்களைக் கையாள முடியாது என்பதையும் சகலரும் கவனத்தில்கொண்டே செயற்படுகின்றோம்” – என்றார்.