சமோதியின் மரணம் தொடர்பில் ஆராய குழு நியமனம் !

0
121
பேராதனை போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற 21 வயதான யுவதியின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழு நாளைய தினம் பேராதனை வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், யுவதிக்கு வழங்கப்பட்ட ஊசி, மரணத்தை ஏற்படுத்தவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், இந்த விடயத்தை விஞ்ஞானபூர்வமாக சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்க குறித்த விசாரணைக்குழுவிற்கு இயலுமானதாக இருக்கும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.குறித்த ஊசி செலுத்தப்பட்ட மேலும் 12 பேர் தற்போதும் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.21 வயதான சமோதி சந்தீபனி வயிற்றுப்போக்கு காரணமாக கடந்த வாரம் கெட்டப்பிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, கடந்த திங்கட்கிழமை காலை பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார்.அவருக்கு ஊசி ஏற்றபட்டதன் பின்னர் நிலைமை மோசமடைந்து அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.