சஷி வீரவங்சவின் வழக்கு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

0
82

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இருந்து புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் சஷி வீரவங்ச முன்வைத்திருந்த விண்ணப்பத்தை பரிசீலிக்கப்பட்ட போது, நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், அதனை புதுக்கடை இரண்டாம் இலக்க நீதவான் நீதிமன்றுக்கு மாற்றுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சஷி வீரவன்ச, தாக்கல் செய்திருந்த இடமாற்ற விண்ணப்பத்தில், தமது வழக்கு விசாரணையில், கொழும்பு பிரதான நீதவானின் நடத்தை பாரபட்சமாக இருப்பதாகவும், இதனால் தமக்கு உரிய நீதி கிடைப்பதில் நம்பிக்கையில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சஷி வீரவங்சவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி, முதலாவது வழக்கில் சஷி வீரவங்ச குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நீதிவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீடு செய்த நிலையில், அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.