எமது உள்விவகாரங்களில் உள்ள விமர்சனங்களைப் பற்றிப் பேசப் போனால் எத்தனை மணித்தியாலங்கள் எடுக்குமோ தெரியாது. கூலிக்கு அமர்த்தப்பட்ட சஹ்ரான் குழு தறுதலைத்தனமாக செய்த செயலையே இந்த நாடு இப்போது பேசிக்கொண்டிருக்கின்றது. அதேவேளை, எமது சமூகத்தின் செயல்பாடுகளால் தான் இந்தக் கும்பல் உருவானது என்பதையும் சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடறிந்த கல்விமானும் முன்னாள் கல்வி அதிகாரியுமான மருதமுனை மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானாவின் கல்வி சமூக சமய அரசியல் மற்றும் கலாசாரப் பணிகளை புதிய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சட்டத்தரணி றுடானி ஸாஹிரால் தொகுக்கப்பட்ட அபுல் கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா வாழ்வும் பணியும் (1920 – 2013) நூல் மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:
கூலிக்கு அமர்த்தப்பட்ட சஹ்ரான் குழு எமது சமூகத்தின் செயல்பாடுகளால் தான் உருவானதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எமது உள்விவகாரங்களைப் பற்றிப் பேச வேண்டும். எமது உள்விவகாரங்களில் உள்ள விமர்சனங்களைப் பற்றிப் பேசப் போனால் எத்தனை மணித்தியாலங்கள் எடுக்குமோ தெரியாது.
அதாவது, ஏராளமான உள்முரண்பாடுகளுடன் வாழ்ந்து வருகின்றோம். புரிந்துணர்வும் சகிப்புத் தன்மையும் எம்மிடையே இல்லாமல் போவதைக் காண்கின்றோம்.
இவ்வாறாக தறுதலைத்தனமாக ஒரு கும்பல் செய்த செயலையே இந்த நாடு இப்போது பேசிக்கொண்டிருக்கின்றது. இதனால் முஸ்லிம் சமூகம் தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.