சிக்குன்குனியா பரவும் அபாயம் – அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரை நாடவும்

0
6

நுளம்புகளால் பரவும் சிக்குன்குனியா வைரசின் பரவலில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிக்குன்குனியா வைரஸ் முதன்முதலில் 1956 ஆம் ஆண்டு தான்சானியாவில் கண்டறியப்பட்டது. பின்னர் 1960 ஆம் ஆண்டு இலங்கைக்குப் பரவியது. சமீபத்திய நாட்களில், சிக்குன்குனியா நோய்ப்பரவல் அதிகரித்து வருகின்றது.

இதுவரையில் சிக்குன்குனியாவாக இருக்கலாம் என சந்தேகத்திற்கிடமான 190 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அவற்றில் 65 பேருக்கு நோயுறுதி செய்யப்பட்டுள்ளதாக சமூக மருத்து நிபுணர் குமுது வீரகோன் தெரிவித்தார். உலகளாவிய ரீதியில் 115 நாடுகளில் சிக்குன்குனியா பரவல் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

2-3 நாட்கள் நீடிக்கும் காய்ச்சல், மூக்கு மற்றும் கைகளில் நிறமாற்றம், தோல் வெடிப்புகள், பல ஆண்டுகளாக நீடிக்கக்கூடிய மூட்டு வலி மற்றும் அன்றாட செயற்பாடுகளைச் செய்வதில் சிரமம் ஆகியவை சிக்குன்குனியாவின் அறிகுறிகளாகும். நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கட்டுப்படுத்துவது டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்ப்பரவலை குறைக்க உதவும் என்று அவர் விளக்கினார்.

சிக்குன்குனியா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால், அது சார்ந்த ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.