கடந்த காலங்களில் 13ஆம் திருத்தச் சட்டம் மற்றும் அதிகார பகிர்வு தொடர்பில் கருத்துரைத்த அரசாங்கம் தற்போது அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் நீதியமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி. ஆரம்ப காலங்களில் அதிகார பகிர்வை எதிர்த்திருந்தது.
எனவே, தற்போது அதே நிலையில் உள்ளதா? என்ற சந்தேகம் எழுகிறது.
இதன்படி, குறித்த சந்தேகத்தை நீக்கி, அதிகார பகிர்வு தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையை சிங்கள, பௌத்த நாடு என மட்டுப்படுத்த வேண்டாம்.
இது தமிழ், சிங்களம், முஸ்லீம் என அனைத்து இன மக்களும் வாழும் நாடாகும்.
தொடர்ந்தும் அரசியலமைப்பு விடயம் தாமதமடைந்து வருகின்றது. எனவே, அரசாங்கம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட வகையில் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் புதிய அரசியலமைப்பில் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அரச கரும மொழிகளாக அறிவிக்கப்பட வேண்டும்.
அதேநேரம் சகல அரச நிறுவனங்களிலும் இரு மொழிகளிலும் மக்கள் சேவையைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.