மன்னாரில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை கிராம மக்கள் அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமியின் மரணத்திற்கு தாமதம் இன்றி நீதி கிடைக்க வேண்டும் என கோரியும் விசேட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த வழக்கை விசாரிக்க கோரியும் தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தின்போது வலியுறுத்தினர்.
இதனிடையே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி கடந்த 17 ஆம் திகதி அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படத்தப்பட்டு கழுத்த நெரிக்கப்பட்ட கொலை செய்யப்பட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.