இவ்வாண்டின் ஆரம்பத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், நாட்டிலுள்ள சகல சிறைச்சாலைகளிலும் பல்வேறு வகையான குற்றச் செயல்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 200 வீதமாக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகளில் தற்போது 29,000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் காணப்படுகின்ற சிறைச்சாலைகளில், 13,241 கைதிகளை அடைத்து வைப்பதற்கு போதுமான இடமே காணப்படுகின்ற போதிலும், 10,000 கைதிகள் சிறைக்கைதிகளாகவும், 19,000 கைதிகள் சந்தேக நபர்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சிறைச்சாலை புள்ளி விபரங்களின்படி, நாட்டிலுள்ள சகல சிறைச்சாலைகளிலும் சிறைக்கைதிகளின் கூட்ட நெரிசல் சடுதியாக அதிகரித்து வருகின்ற போக்கு காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, சிறைக்கைதிகளின் உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்காக அதிகளவிலான பணத்தை செலவிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.