நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 31,303 குடும்பங்களைச் சேர்ந்த 130,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அனர்த்தங்களில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காணாமல்போயுள்ளனர்.
மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கடும்மழை, வெள்ளம், மண்சரிவு, கடுங்காற்று காரணமாக கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 35 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிப்படைந்துள்ளன.
27 இடைத்தங்கள் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்நிலையங்களில் 1,119 குடும்பங்களைச் சேர்ந்த 5,067 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
200 குடும்பங்களைச் சேர்ந்த 792 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பகுதியளவிலான சேதங்கள் 317ம் முழுமையான சேதங்கள் 5ம் பதிவாகியுள்ளன.
இரத்தினபுரி அயகம இஹலபொல பிரதேசத்தில் இன்று(4) காலை ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
50 வயதுடைய பெண் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர் ஹொரன ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த அனர்த்தத்தில் பாடசாலை மாணவியான சித்மினி லக்மாலி என்பவரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கடுபிட்டி ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
10 வயது சிறுவனும் 21 வயது இளைஞருமே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை தீஎல் ஓயா, அத்தனகலு ஓயா பெருக்கெடுத்தன் காரணமாக வெயாங்கொடை பிரதேசத்தில் 400 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.