நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்கும் வகையில், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை சட்டத்தின் திருத்தம் தொடர்பான ஆலோசனைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு, ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சுகாதாரத்துறை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்தார்.
தற்போதுள்ள நடைமுறையின் கீழ் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளுக்கான இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் மறு-அங்கீகார செயல்முறையை துரிதப்படுத்துமாறும் சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் செயல்முறை மூலம் கொள்வனவு செய்வதற்குப் பதிலாக நேரடியாக கொள்வனவு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தடுப்பூசிகளின் தரம் தொடர்பான சிக்கல்கள் மற்றும் சுகாதார சேவை நிறுவனங்களின் ஊழியர்களின் அலட்சியத்தால் இடம்பெற்றதாகக் கூறப்படும் அண்மைய சம்பவங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
அத்துடன், உரிய நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதி செய்தல், வேறு நோக்கங்களுக்கு நிதியை பயன்படுத்துவதைத் தடுத்தல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பான நிலுவைத் தொகை மற்றும் சேவை ஒப்பந்தங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
நிதி வெளிப்படைத்தன்மையை பேணுவதற்கு ஆவணங்களில் உரிய அதிகாரிகள் கையொப்பமிட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க திறைசேரியின் பிரதிநிதி உள்ளடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இலங்கை மருத்துவ சபையில் இதுவரை பதிவு செய்யப்படாத வைத்திய அதிகாரிகள் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் உரிய விதிமுறைகளை மீளாய்வு செய்யுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜே.எஸ். சந்திரகுப்தா, திறைசேரியின் பிரதி செயலாளர் ஆர்.எம்.பி. ரத்நாயக்க மற்றும் துறைசார் அரச நிறுவனங்களின் தலைவர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன உள்ளிட்ட சுகாதாரத் துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.