சுகாதார விதிமுறைகளின் படி முள்ளிவாய்க்காலில் நினைகூர தடையில்லை! நீதிமன்று தீர்ப்பு

0
372

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் சுகாதார விதிமுறைகளின்படி நினைவு கூரப்படலாம் என்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்று இன்று திருத்திய கட்டளையை வெளியிட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி இன்று திங்கட்கிழமை நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நகர்தத்ல் பத்திரத்தின் விசாரணைகளின் பின்னரே நீதிமன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தலில் கலந்துகொள்வதைத் தடுக்கும் வகையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் 37 பேருக்குத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவில் அவர்களுடன் இணைந்து செயற்படுகின்றவர்களுக்கும் தடையுத்தரவு வழங்கப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இன்றும் 20 இற்கும் மேற்பட்டவர்களுக்குத் எதிராக தடையுத்தரவு பெறுவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டு வந்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் பிரிவுகளினால் இந்த தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.
இந்தத் தடையுத்தரவுகளை உடன் இரத்துச் செய்யுமாறும், நினைவேந்தல் செய்வதற்கு அனுமதிக்குமாறும் கோரியே முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
பீற்றர் இளஞ்செழியன் சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகமும், முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் சார்பில் சட்டத்தரணி தனஞ்சயன் தலைமையில் ஏனைய சட்டதரணிகளும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பிலும் சட்டதரணிகளான சுகாஸ் ,காண்டீபன் ஆகியோரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.