சுவிஸ் உதயம் அமைப்பின் அனுசரணையுடன் மகளிர் தின நிகழ்வுகள்

0
235

சர்வதேச மகளிர் தினம் இன்றாகும். சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயம் அமைப்பின் அனுசரணையுடன் இன்று காலை சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.

இலங்கை பெண்கள் மற்றும் மகளிர் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ‘நாடும் தேசமும் உலகும் அவளே’ எனும் கருப்பொருளுக்கு அமைவாக இவ்வாண்டு மகளிர் தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவியும் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண செயலாளர் திருமதி றொமிலா செங்கமலன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது அண்மையில் மரணமான மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஸ்தாபகரும் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண முன்னாள் செயலாளரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவியுமான திருமதி செல்வி மனோகருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மகளிர் தினத்தின் முக்கியத்துவம் தொடர்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது. அத்துடன் 100 வறிய பெண்களுக்கான உலர் உணவுப்பொதிகளும் சுவிஸ் உதயம் அமைப்பினால் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பெருமளவான மகளிர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.