சோளத்தைப் பயன்படுத்தி மதுபானம், எதனோல் தயாரிப்பதைத் தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிட கலால் திணைக்கள ஆணையாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மதுபானம், எதனோல் தயாரிக்க சோளத்தைப் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவுள்ளது.
இதேவேளை விவசாயிகளிடமிருந்து மஞ்சள் மற்றும் சோளம் உள்ளிட்ட அறுவடைகளைக் கொள்வனவு செய்யும் போது இடம்பெறும் முறைகேடுகளைத் தடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன் மஞ்சள் மற்றும் சோளப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு நியாயமான விலையொன்றைப் பெற்றுக்கொடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்ற மஞ்சள் தொகைகளை அழிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.