போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் வங்கி கணக்குகளில் 12.2 பில்லியன் ரூபா பணம் பரிமாறப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார்.அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சட்டமா அதிபர் சார்பில், உயர்நீதிமன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகமான பிரியந்த நாவன தெரிவித்துள்ளார்.போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு எல்லே குணவங்ச தேரர் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையின் போதே இந்த அறிவிப்பு வெளியானது.போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் 11 வங்கி கணக்குகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே இந்த தகவல்கள் உறுதியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிதி எங்கிருந்து கிடைக்கப்பெற்றது? அவற்றை யார் வைப்பிலிட்டது என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மேலதிக மன்றாடியார் நாயகம் தெரிவித்துள்ளார்.
மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தல் மற்றும் பணச்சலவையை தடுக்கும் சட்டத்தின் கீழ் குறித்த போதகர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த முறைப்பாடு தொடர்பில் மத தலைவர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலதிக மன்றாடியார் நாயகமான பிரியந்த நாவன தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கைகளை ஐந்து தடவைகள் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சமர்பித்த குற்றப்புலனாய்வு திணைக்களம் உரிய உத்தரவுகளை பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.