எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கை துறைமுகத்திற்குள் நுழைந்தமை உள்ளிட்ட அனைத்து சம்பவமும் சந்தேகத்திற்குரியவை என்பதனால் சுயாதீன விசாரணையை நடத்துமாறு ஜே.வி.பி. கோரியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க, கப்பல் சம்பந்தப்பட்ட முழு சம்பவம் தொடர்பான அனைத்து உண்மைகளையும் அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் அரசியல் அதிகாரம் மற்றும் பேரழிவிற்கு காரணமான அதிகாரிகள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
குறித்த கப்பல் மூழ்குவதற்கு முன்னர் அதிகாரிகள் ஏன் தீயை அணைக்கவோ அல்லது ஆழமான கடல்களுக்கு இழுத்துச் செல்லவோ தவறிவிட்டார்கள் என்பது சந்தேகத்திற்குரியது என்றும் அநுர குமார திசாநாயக்க சுட்டிக்கட்டினார்.
அரசாங்கத்தின் கீழ் தரமான அரசியலால் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இலங்கையில் தற்போது தடுப்பூசி அரசியலே காணப்படுகிறது என்றும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் ,
தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளுக்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஆலோசனை வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வேலைத்திட்ட திட்டமிடல்களும் காணப்பட்டன. அந்த வேலைத்திட்டங்களுக்கு அமையவே தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.
உலகின் பல நாடுகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வேலைத்திட்டங்களையே ஏற்றுக் கொண்டுள்ளன. இவற்றை இலங்கையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆனால் அரசாங்கத்தின் கீழ் தரமான அரசியலால் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி என்பது நாட்டு மக்களின் உரிமையாகும். ஆனால் தற்போது அவற்றை உரிய நேரத்தில் பெற்றுக் கொடுக்க தவறியமை தொடர்பில் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தின் இயலாமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.