ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்; மூல வாக்களிப்பு நாளை முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளது.
தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7 இலட்சத்து 12 ஆயிரத்து 321 அரச ஊழியர்கள் தகுதிபெற்றுள்ளனர்.
மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், சிரேஷ்ட மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், சிறப்பு அதிரடிப் படை முகாம்கள், சிறப்பு பொலிஸ் பிரிவுகள் மற்றும் உயரடுக்கு பாதுகாப்புப் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நாளை தபால் மூலம் தமது வாக்கினை அடையாளப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 5ஆம், 6ஆம் திகதிகளில் முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே, தபால் மூல வாக்குகளைக் குறித்த தினங்களில் செலுத்த முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12ஆம் திகதிகள் வாக்களிக்க மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.