தமிழக முதல்வரை சந்திப்பதற்காக சென்னையில் முகாமிட்டுள்ள இந்திய மீனவர்கள்

0
151

இலங்கை கடற்படையின் ரோந்து பணியின் போது தாம் அச்சுறுத்தப்பட்டதாக தெரிவித்து, இந்திய மீனவர்கள், இந்தியா, தமிழ்நாட்டு முதல்வரை சந்திப்பதற்காக, சென்னையில் முகாமிட்டுள்ளனர் என்று, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் கடலுக்கு நேற்று (20) மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் இரவு கச்சத்தீவுக்கும் தனூஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துவிட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் கரை திரும்பும் போது, கச்சத்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், படகுகளை சுற்றி வளைத்து மீனவர்களை கைதுசெய்யும் நோக்கில் அச்சுறுத்தினர்.

உயிருக்குப் பயந்தும் படகு பறிமுதல் செய்யப்படும் என்ற அச்சத்தாலும் மீனவர்கள் தப்பியோடியுள்ளனர்.

இதன்போது இலங்கை கடற்படையினர் படகுகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியும் விரட்டியடித்தனர் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்போது வஸ்தியான் என்பவரது படகு நடுக்கடலில் மூழ்கியுள்ளது.

படகிலிருந்த சுரேந்திரன், ஜெயபால், ஆகாஸ் டேனியல், ராஜா, ஜெபஸ்தீயான் உள்ளிட்ட ஏழு மீனவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை கண்டித்து 21ஆம் திகதி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் உடனடியாக மீனவ அமைப்புக்களை சந்திக்க விரும்புவதாக கூறியதை அடுத்து, மீனவர் சங்க பொறுப்பாளர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.