தமிழ்நாட்டின் அகதிமுகாமில் பல வருடம் வாழ்ந்த பின்னர் தாயகம் திரும்பிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை ஆழ்ந்த கவலையளிப்பது மாத்திரமல்ல, நல்லிணக்கம்,மீள்குடியேற்றம் குறித்து உங்கள் அரசாங்கம் பகிரங்கமாக வெளியிட்ட வாக்குறுதிகளிற்கு முரணானது என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கனடியத் தமிழர் பேரவைதெரிவித்துள்ளது
கனடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது.
தமிழ்நாட்டின் அகதி முகாமில் பல வருடங்கள் வாழ்ந்த பின்னர் பலாலி விமானநிலையம் ஊடாக தாயகம் திரும்பிய 75 இலங்கை தமிழர் மே 29ம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறித்து எமது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகின்றோம்.
ஐக்கியநாடுகளின் அகதிகளிற்கான உயர்ஸ்தானிகரலாயத்தினால் அகதி என ஏற்றுக்கொள்ளப்பட்ட, உரிய அதிகாரிகளிடமிருந்த தனது பயணத்திற்கான அனுமதி, பெற்ற செல்லுபடியாகும் கடவுச்சீட்டை வைத்திருந்த ஒருவரையே கைதுசெய்துள்ளனர்.
இந்த சம்பவம் ஆழ்ந்த கவலையளிப்பது மாத்திரமல்ல, நல்லிணக்கம்,மீள்குடியேற்றம் குறித்து உங்கள் அரசாங்கம் பகிரங்கமாக வெளியிட்ட வாக்குறுதிகளிற்கு முரணானது.
பலவந்தமாக இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களை அவர்கள் தப்பிவெளியேறிய சூழ்நிலைகளுக்காக குற்றவாளியாக்க கூடாது.குறிப்பாக அவர்கள் நல்லெணத்துடன்,சட்டபூர்வமாக மீளதிரும்பும் சூழ்;நிலையில்.
தங்கள் பகுதிகளிற்கு மீளதிரும்பும் அகதிகளை கைதுசெய்வது பாதிக்கப்பட்ட நபருக்கு மாத்திரமல்ல,மீளதிரும்புவது குறித்து சிந்திக்கும் ஆயிரக்கணக்கானவர்களிற்கும் தவறான செய்தியை தெரிவித்துவிடும்.இது நம்பிக்கையின்மை,அச்சம் ஏமாற்றம் போன்றவற்றை உருவாக்கும்
தமிழ்நாட்டின் முகாம்களில் 58,000 இலங்கை தமிழ் அகதிகள் வாழ்வதையும்,40,000 பேர் முகாமிற்கு வெளியே வாழ்வதையும் நீங்கள் அறிவீர்கள்.
இவர்களில் சுமார் பத்தாயிரம் பேராவது மீளதிரும்புவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் மீளத்திரும்பும் அகதிகளை இவ்வாறு தன்னிச்சையான தண்டிக்கும் விதத்தில் நடத்துவது மீள்குடியேற்றத்தை ஊக்குவிக்காது.
மோதல் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேறியவர்கள் உட்பட நாட்டிற்கு மீள திரும்புபவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என இலங்கையின் சட்டம் தெரிவிக்கின்றதென்றால்,அவர்கள் பாதுகாப்பான கௌரவமான தடையற்ற விதத்தில் நாட்டிற்கு திரும்புவதை உறுதி செய்யவேண்டிய தார்மீக கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்குள்ளது.
நீங்கள் உடனடியான தவறை திருத்தும் நடவடிக்கையை எடுக்கவேண்டும் என உங்களை வலியுறுத்திக்கேட்டுக்கொள்கின்றோம்.கைதுசெய்யப்பட்ட நபரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்,இலங்கை திரும்பும் அகதிகளை பாதுகாப்பதற்கான தெளிவான மனிதாபிமான விதிமுறைகளை உருவாக்குங்கள்.