இலங்கையின் மிகவும் பழமையான முருகன் திருத்தலங்களுல் ஒன்றாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் பல்வேறு இடங்களிலும் ஆலயத்தினை நோக்கி பாதயாத்திரை நடைபெற்றுவருகின்றது.
புளியந்தீவு ஆனைப்பந்தியான் சமூக நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவத்திற்கான வருடாந்த பாதயாத்திரையானது இன்று காலை ஆரம்பமானது.
புளியந்தீவு ஆனைப்பந்தி விக்கினேஸ்வரர் ஆலயத்தில் பூசை நிகழ்வுகள், யாத்திரிகர்களுக்கான உருத்திராட்ச மாலை அணிவித்தல் நிகழ்வு, வேலுக்கான விசேட
பூஜை ஆராதனைகள் இடம்பெற்று அடியார்கள் யாத்திரையை ஆரம்பித்தனர்.
இவ் யாத்திரையானது புளியந்தீவு சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், திரௌபதி அம்மன் ஆலயம் உட்பட அனைத்து ஆலயங்களிலும் தரிசிப்புகளை மேற்கொண்டு நாளைய தினம் தாந்தாமலை முருகன் ஆலயத்தைச் சென்றடையவுள்ளது.
ஆனைப்பந்தியான் சமூக நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் எட்டாவது தடவையாக இடம்பெறுகின்ற இவ் யாத்திரை நிகழ்வில் இவ்வருடம் பல ஆலயங்களில் இருந்தும் பக்த அடியார்கள், யாத்திரிகர்கள் கலந்து கொள்கின்றமை சிறப்பம்சமாகும்.