தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது பாதீட்டினை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.இந்தநிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காகக் கடந்த 9 ஆம் திகதியன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டது.
நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது பாதீட்டு உரையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற அடிப்படையில் இன்று காலை 10.30 க்கு நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.பாதீட்டில் இந்த ஆண்டுக்கான மொத்த அரச செலவினமாக 4,218 பில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு அரச செலவினமாக 6, 978 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு அரச செலவினம் 2,760 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.இந்த முறை பாதீட்டில் அதிகளவான தொகை நிதிஇ திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றதன் பின்னர் நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பை அல்லது பாதீட்டு உரையை முன்வைக்க உள்ளார்.
இந்த முறை பாதீட்டினூடாக இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் கல்வி சுகாதாரம் மற்றும் நலன்புரி ஆகிய துறைகளுக்குக் கடந்த காலங்களைக் காட்டிலும் கணிசமான அளவு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையாளர்களின் வேதனம் கணிசமான அளவு அதிகரிக்கப்படுவதுடன் தனியார்த்துறையினரின் வேதனத்தை நிறுவன கட்டமைப்பினூடாக அதிகரித்துக் கொள்ளும் மூலோபாய திட்டங்களும் முன்வைக்கப்படவுள்ளன.
எவ்வாறாயினும் வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு இந்த முறை பாதீட்டில் விசேட அவதானம் செலுத்தப்படவில்லை.இந்தநிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை 7 நாட்கள் நடைபெறும்.இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து குழுநிலை விவாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகிஇ மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.பாதீட்டின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.