நம்பகத்தன்மையை உறுதிசெய்ய உள்நாட்டுப் பொறிமுறைகள் வரும்- விஜித அறிவிப்பு

0
20

அரசியலமைப்பினூடாக நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கென உள்நாட்டுப் பொறிமுறைகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமென்றும் காணாமல் போனோர் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் மேலும் பலப்படுத்தப்படுமென்றும் வெளிநாட்டலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்ட கூட்டம் நேற்று முன்தினம் (25) ஜெனீவாவில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தேர்தல்களில் இலங்கை மக்கள் நாட்டை பொருளாதார சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை நோக்கி வழிநடத்துவதற்கு வலுவானதொரு ஆணையுடன் கூடிய புதிய அரசாங்கத்தைத் தெரிவுசெய்தனர்.

இத்தேர்தல்களின் முடிவுகள் நாட்டின் சகல பகுதிகள் இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்துமான ஒன்றுபட்ட குரலை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.இம்முறை பாராளுமன்றம் அதிக எண்ணிக்கையிலான பெண் பிரதிநிதிகளை கொண்டுள்ளதுடன் பாலினம் இனம் அல்லது ஏனைய காரணிகளைப் பொருட்படுத்தாமல் நாட்டின் சகல மக்களின் உரிமைகளையும் நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்தும். இலங்கையின் புதிய பாதையை இவ் உள்ளடக்கம் பிரதிபலிக்கிறது.

பொருளாதார நெருக்கடி மக்கள்தொகையின் சகல பிரிவுகளையும் குறிப்பாக ஏழ்மையான மற்றும் நலிவானவர்களை பெரிதும் பாதித்துள்ளது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி தொடர்ந்து, நியாயமான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் பொருளாதார மாற்றம் மற்றும் சிறப்பான பொருளாதார ஜனநாயக மயமாக்கலுக்கான அடித்தளத்தை அமைக்கும் பணியில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது.எமது மக்கள் குறிப்பாக நலிவடைந்த சமூகம் மீது பொருளாதார சவால்களின் தொடர்ச்சியான தாக்கத்தை நாங்கள் நன்கு அறிவதுடன் அவர்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை மேம்படுத்த தற்போது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாம் 2025ஆம் ஆண்டுக்கான தேசிய பாதீட்டில் சமூக நலன் மற்றும் பாதுகாப்புக்கான அதிகரித்த ஒதுக்கீடு உட்பட மக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கான தொடர் நடவடிக்கைகளுக்கு உறுதியளித்துள்ளோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சமூகபொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் மீள்குடியேற்றம் வீடளித்தல் இழப்பீடு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு போன்ற முக்கியமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்குமான சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 01ஆம் திகதி ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தையும் தார்மீக மற்றும் நெறிமுறை நிர்வாகத்துக்கான அர்ப்பணிப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அரசாங்கமானதுஇ ஒருமைப்பாட்டை முன்னுரிமைப்படுத்துவதுடன், தவறான முகாமைத்துவம் மற்றும் ஊழல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம் சுதந்திரத்தின் அடிப்படையானதும் பழமைவாய்ந்ததுமான கொள்கைகள் மதிக்கப்படுவதுடன் பாதுகாக்கப்படும் அதேவேளை சகல குடிமக்களின் மனித உரிமைகளையும் பாதுகாக்கும். இந்நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டே, நிர்வாக, அரசியல் மற்றும் தேர்தல் செயன்முறைகள் செயற்படுத்தப்படும்.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலும் முன்னேற்றுவதற்கு தீவிரமானதும் கட்புலனாவதுமான நடவடிக்கைகளை எடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. சீராக்கப்பட்ட இலங்கை மற்றும் சமூகங்களுக்கு இடையிலான இடைவெளிகளைக் குறைப்பதற்கான எமது, தொலைநோக்குக்கேற்ப, தினத்தை அறிவிக்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.

முரண்பாடுகள் தவிர்த்த ஏனைய எஞ்சியுள்ள சவால்களை எதிர்கொள்ள நிறுவப்பட்ட உள்நாட்டு செயன்முறைகள் சுயாதீனமான மற்றும் நம்பகமான முறையில் தங்கள் பணிகளைத் தொடரும் என்பதை உறுதி செய்வோம். காணாமல் போனோர் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் மேலும் பலப்படுத்தப்படும்.

அரசியலமைப்பினூடாக உள்நாட்டு பொறிமுறைகளின் மூலம் நம்பகத்தன்மையை உறுதிபடுத்துவதே எங்களின் நோக்கமாகும். நாட்டுக்குள் ஏற்படும் பதற்ற நிலை மற்றும் வன்முறை செயல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும்.உள்நாட்டு பொறிமுறைகளை அரசியலமைப்பு கட்டமைப்புக்குள் நம்பகமானதாகவும் உறுதியானதாகவும் மாற்றுவதே எமது நோக்கமாகும். இலங்கை சமூகத்துக்குள் பதற்றங்களை ஏற்படுத்தும் வன்முறைச் செயற்பாடுகளை விசாரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரமளிக்கப்படும்.

மக்களின் ஆணையுடன் நீதியானதும் நியாயமானதும் மற்றும் வளமானதுமான சமூகத்துக்காக அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான பொறுப்பை அரசாங்கம் முழுமையாக அறிந்திருக்கிறது. தேசிய ஒற்றுமை நல்லிணக்கம் மற்றும் சகல அம்சங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி நாம் பாடுபடும்போது சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஊக்கமளித்தலும் ஆதரவும் முக்கியமானதாக இருக்கும்.

இலங்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் தீவிர உறுப்பினராகவும் சகல முக்கிய மனித உரிமை தொடர்பிலான ஆவணங்களிலும் தரப்பொன்றாகவும் உள்ளது. ஒப்பந்த அமைப்புகள் மற்றும் சிறப்பு நடைமுறைகளுடன் நாங்கள் தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயற்படுகிறோம்.கடந்த சில ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட சிறப்பு வருகைகள் இடம்பெற்றுள்ளதுடன் மிகச் சமீபத்தில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டு ஒழிப்புக்குழு (CEDAW), சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) மற்றும் உலகளாவிய காலமுறை மீளாய்வு (UPR) போன்ற ஒப்பந்தங்களுடன் வினைத்திறனாக ஈடுபட்டுள்ளோம். தொடர்ச்சியான மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டின் மூலம் மனித உரிமைகள் குறித்த உண்மையான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்புக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

உலகளாவிய தன்மை, பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காத தன்மை ஆகியவற்றின் ஸ்தாபகக் கொள்கைகளுக்கு ஏற்ப, சமச்சீரானதும் முழுமையானதுமான முறையில் அழுத்தம் விளைவிக்கும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் இச்சபையை ஆதரிக்க இலங்கை தயாராக உள்ளது. வலுவான தேசிய மனித உரிமை கட்டமைப்புகள் மூலம், தங்கள் சவால்களை எதிர்கொள்ள நாடுகள் ஊக்குவிக்கப்பட்டு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.எங்கள் தேசிய சட்ட கட்டமைப்புக்குள் ஐக்கிய நாடுகள் மற்றும் இச்சபையுடன் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஒத்துழைப்புடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றார்.