நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டியது அவசியம் – காமினி லொக்குகே எம்.பி

0
173

மீண்டும் நாட்டில் வரிசை யுகம் ஏற்படாத வகையில் நாட்டை கொண்டு செல்ல வேண்டியது அவசியம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்று எம்முன்னிலையில் பாரிய சவால்கள் காணப்படுகின்றன. நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டு இருக்கின்றது. நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். மீண்டும் நாட்டில் வரிசை யுகம் ஏற்படாமல் அரசாங்கத்தை கொண்டுசெல்ல வேண்டியது அவசியம்.

அதற்கான நடவடிக்கைகளில் ஜனாதிபதியும் பிரதமரும் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் சாதகமான நிலையை எட்டியுள்ளன.

எனவே எதிர்வரும் மார்ச் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி கடைக்கப்படும் பட்சத்தில் சகல சலுகைகளையும் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம்.

நாடு என்ற முறையில் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டு வருகின்றோம்.

நாட்டு மக்கள் இன்று தெளிவாகவே உள்ளனர். இன்று அனைவருக்குமே நெருக்கடியான காலக்கட்டமாகும். எவ்வாறாயினும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி நல்லிணக்க சமூகத்துடன் வாழக்கூடிய நிலைமையை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.