நிந்தவூரில் கரையோர பகுதிகளில் கடலரிப்பு

0
401

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் பாரிய கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட கடற்கரை பகுதியில் உள்ள சுமார் 100 மீற்றருக்கு அதிகமான நிலப்பரப்பு கடலால் காவு கொள்ளப்பட்டுள்ளதுடன் 75 இற்கும் மேற்பட்ட காணிகள் மற்றும் தென்னந் தோட்டங்களும் கடலரிப்பால் அழிந்துள்ளன.

கடலில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றங்களினால் கடலரிப்பு அதிகமாக காணப்படுவதுடன் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடலரிப்பினால் இப்பிரதேச கடற்கரை பிரதேசத்தில் தென்னை மரங்கள் வீழ்ந்துள்ளதுடன் கரையோரங்களில் நிர்மாணிக்கபட்டிருந்த கட்டடங்களின் ஒரு பகுதி முற்றாக இடிந்து கடலுக்குள் வீழ்ந்துள்ளது.

இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் கடற்கரை சார்ந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக கரையோரம் பேணல் திணைக்களத்தினால் 100 மீட்டர் நீளத்துக்கு கற்களை கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் கடந்த காலங்களில் மீன்பிடி நடவடிக்கைகள் நடைபெறாத பகுதிகளில் நடைமுறைப்படுத்தபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்துகின்ற பகுதிகளில் கற்களை கொண்டு தடுப்பு சுவர் அமைப்பது அவர்களின் நாளாந்த தொழிலுக்கு தடையாக அமையும் என்பதனால் கரையோரம் பேணல் திணைக்களத்தினால் இப்பகுதியில் மண் மூடைகள் இடுவதற்காக திட்டமிட்டிருந்ததுடன் ஜியோ பேக் பைகளில் மண் இட்டு நிரப்பி கடல் அரிப்பை தடுக்கும் முறைகள் தொடர்பில் கரையோரம் பேணல் திணைக்களத்தினால் பல மில்லியன் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், குறித்த செயற்பாடுகள் இதுவரையில் முன்னெடுக்கப்படாத நிலையில், தமது வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், தாம் வாழ்வதற்கான அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதுடன், கடலரிப்புத் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்திர தீர்வு ஒன்றைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.