அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பது குறித்த உயர்மட்ட கூட்டம் நேற்று நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது.இதன் போது கடலரிப்பை தற்காலிகமாக தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறியியலாளர் விளக்கமளித்தார்.
கடலரிப்பிற்கு உள்ளாகும் பிரதேசங்களையும் அங்குள்ள மக்களின் வாழ்வாதார தொழில் முயற்சிகளை மேலும் அழிவடையாத வண்ணம் பாதுகாத்து மீளக் கட்டி எழுப்ப வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்
எம்.ஏ.எம்.தாகிர் கடல் அரிப்பை தடுப்பதற்கான எரிபொருள் மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கு தேவையான நிதியை பிரதேச சபை நிதியிலிருந்து வழங்குவதாகவும் இதனைக் கொண்டு வேலைகளை துரிதப்படுத்துமாறும் பொறியியலாளரை கேட்டுக்கொண்டார்.
நிரந்தர தீர்வினை நோக்கிய கலந்துரையாடலில் அதற்கான முன்னெடுப்புகள் மற்றும் செயற்பாடுகளை பொறியியலாளர் விளக்கிய போது கடலில் நீரோட்டதுக்கு குறுக்காக கிழக்கு மேற்காக கற்கள் இடும் பணியை நிந்தவூர் பிரதேச சபையின் உதவி தவிசாளர் வை.எல்.சுலைமாலெப்பை உரிய அமைச்சரோடு தொடர்புகொண்டு முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் நிதி நிலைமை கருதி நிதி பற்றாக்குறைகள் ஏற்படும் போது அனர்த்த முகாமைத்துவ அணியும் ஊர் சார்பான பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் சபையில் கலந்துரையாடப்பட்டது.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதேச செயலாளர் சட்டத்தரணிஅப்துல் லத்தீப், கரையோர வளம் பேணல் பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர், மற்றும் நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளர் சுலைமாலெப்பை, நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் செயலாளர் எம் எஸ் எம் நிப்றாஸ் மற்றும் அதன் பிரதிகள் முதலானோர் கலந்து கொண்டனர்.