நிலத் தொடர்புகளற்ற தீவுகளில் பணியாற்றும் பல ஆசிரியர்களுக்கு உள்ளக இடமாற்றம் எனும் பெயரில் சுற்றறிக்கைக்கு முரணாக ஆசிரிய இடமாற்றங்கள் நடைபெறுகின்றன. இதனால் பல சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ச்சியாக பணியாற்றும் ஆசிரியர்கள் தாம் நீண்டகாலம் தீவகத்தில் கடமையாற்றி விட்டதாகவும் அதனால் தாமும் மற்றவர்களைப்போல நகர்ப்புற பாடசாலைகளுக்கு செல்ல தகுதியுடையவர்களாக இருப்பதாகவும் தங்களையும் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு அர்ப்பணிப்போடு கடமையாற்றும் ஆசியர்கள் தீவகத்தில் இருந்து வெளியேறினால் தீவகத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை இன்னும் மோசமடையும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், இதே போன்று வடக்கின் சில வலயங்களில் நடைமுறைப்படுத்தப்படும் முறையற்ற இடமாற்றங்களால் அதிகஸ்ட, கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இத்தகைய செயற்பாடுகள் பழிவாங்குதல், அரசியல் பின்னணி போன்ற காரணங்களால் முன்னெடுக்கப்படுவதாகவும் செல்வாக்குள்ள சிலர் தாம் நினைத்த இடங்களுக்கு நகர்த்தப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
அதே வேளை ஒருசில அதிபர்கள், கல்வி அதிகாரிகள் ஒரே நிலையத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக கடமையில் உள்ளனர். அவர்களுக்கு அவர்களின் சேவை நிபந்தனையில் உள்ள முறைமை பின்பற்றப்படுவதில்லை. யாழ் கல்வி வலயத்தில் நியமனக் காலம் முதல் 24 ஆண்டுகளாக ஒருவர் ஒரே பாடசாலையில் அதிபராக உள்ளார். இதுபற்றி பலரும் முறைப்பாடு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மாறாக பழிவாங்கும் நோக்கோடு சில பெண் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதும் வேதனத்தை நிறுத்துவதும் சாதாரணமாக உள்ளது – என்றுள்ளது.