அமைச்சர் சரத் வீரசேகர தன் மீது சட்ட நடவடிக்கையை கட்டாயம் எடுக்கட்டும் எனவும் அதுதொடர்பில் நீதிமன்றில் சந்திப்போம் என்றும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பில் இன்று யாழில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: சரத் வீரசேகர சட்ட நடவடிக்கை எடுத்தால் நான் அதை வரவேற்பேன். இதன்மூலம் பல பிரச்னைகளை வெளியில் கொண்டுவரக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எங்களுக்கு ஏற்படும்.
ஏனென்றால் நான் இதுவரையில் எடுத்திருக்கும் அத்தனை நடவடிக்கைகளும் ஜனநாயகத்துக்கு உட்பட்டவையே. வெறுமனே அவர்கள் நினைத்ததுபோன்று எங்களைக் குற்றம்சாட்ட முடியாது.
என் மீது சட்ட நடவடிக்கையை கட்டாயம் எடுக்கட்டும். நீதிமன்றத்தில் சந்திப்போம் எனத் தெரிவித்தார்.