நெற்செய்கையாளர்களை இலக்கு வைத்து இரசாயன உரம் மீதான தடைவிதிப்பை நடைமுறைப்படுத்தியதாகவும் அதன் காரணமாகவே நெற்செய்கையாளர்களுக்கு மட்டும் நட்டஈட்டை வழங்குவதற்கு தீர்மானித்ததாகவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கான நேரத்தில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இரசாயன உரம் மீதான தடைவிதிப்பு காரணமாக ஒட்டுமொத்த விவசாயத்துறையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நெற்செய்கையாளர்களுக்கு மட்டும் நட்டஈட்டை வழங்குவதற்கான காரணம் என்று இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து உரையாற்றிய அமைச்சர்,
ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி இரசாயன உரம் மீதான தடைவிதிப்பு தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது. எனினும் தேயிலைத் தொழிற்றுறையை கருத்திற்கொண்டு இரசாயன உர இறக்குமதிக்கு நாம் அனுமதி வழங்கினோம்.
இரசாயன உரத்துக்கு நாம் தடைவிதித்திருந்தாலும் கடந்த வருடம் ஜனவரி மாதம் அளவில் நாம் இரசாயன உரத்தை இறக்குமதி செய்திருந்தோம். நாட்டில் அப்போது இரசாயன உரம் கையிருப்பில் இருந்தது. சிறுபோகத்திலும் நாம் பயிர்ச்செய்கைகயை ஆரம்பிக்கும்போது உரம் இல்லை என்று கூறி விவசாயிகள் வீதிக்கு இறங்கினர்.
நானும் இராஜாங்க அமைச்சரும் இணைந்து உரக்கூட்டுத்தாபனங்களுக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த இரசாயன உரங்களை வெளியில் கொண்டுவந்து அதனை விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டோம்.
எனவே இரசாயன உரம் மீதான தடைவிதிப்போடு அதுசார்ந்த மோசடி கும்பலொன்று உருவாகியது. வர்த்தகர்கள் உரத்தை மறைத்து வைத்தனர். வியாபார நிறுவனங்கள் உரத்தை மறைத்து வைத்தன. நாட்டில் உரத்தட்டுப்பாடு ஏற்படும் வகையில் செயற்பட்டனர். இதனை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எனினும் தேயிலைத் தோட்டங்களின் நலன்கருதி 47,000 மெட்ரிக் தொன் உரத்தை இறக்குமதி செய்து அதனை நாம் விநியோகித்தோம்.
அதேபோன்று மரக்கறி செய்ககைளுக்கும் உரம் கையிருப்பில் இருந்தது. உரத்தில் ஓரளவு குறைபாடு இருந்தது. அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
எனினும் இரசாயன உரம் மீதான தடைவிதிப்பானது முற்றுமுழுதாக நெற்செய்கையாளர்களையே பாதிப்புக்கு உள்ளாக்கியது. நெற்செக்கைக்காக காபனிக் உர விநியோகத்தை மட்டுமே அரசாங்கம் நிவாரணமாக வழங்கியது. அத்துடன் இரசாயன உர பயன்பாட்டுக்கும் அனுமதி வழங்கினோம்.
நெற்செய்கையாளர்களை இலக்கு வைத்து இந்த தடைவிதிப்புகளை நடைமுறைப்படுத்தியதன் காரணமாகவே நாம் நெற்செய்கையாளர்களுக்கு மட்டும் நட்டஈட்டை வழங்குவதற்கு தீர்மானித்தோம்.
எவ்வித அச்சமுமின்றி நெற்செய்ககைளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் என்ற முறையில் நான் தொடர்ச்சியாக நெற்செய்கையாளர்களுக்கு வலியுறுத்தி வந்தேன். உற்பத்தியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அந்த விவசாயிக்கு பொருளாதார ரீதியில் எவ்வித பாதிப்பும் ஏற்பட இடமளிக்க போவதில்லை என்றும் நான் தொடர்ச்சியாகக் கூறிவந்தேன்.
இதன் காரணமாகவே நெற்செய்கையாளர்களுக்கு மட்டும் நட்டஈடு வழங்குவதற்கு நாம் தீர்மானித்தோம்.