நோன்பை முன்னிட்டு, தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு காத்தான்குடி நகர சபையால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது

0
202

மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட பகுதிகளில், புனித நோன்பை முன்னிட்டு, தரம் 1 முதல் தரம் 10 வரையான மாணவர்களுக்கான கற்றல்
செயற்பாடுகளை, தனியார் கல்வி நிலையங்கள் இடைநிறுத்த வேண்டும் என காத்தான்குடி நகர சபை செயலாளர் ரிப்கா ஸபீன் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 24ம் திகதி வரை கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காத்தான்குடி நகரிலுள்ள தனியார் பிரத்தியேக கல்வி நிறுவனங்களில் நோன்பு நாட்களில் காலை 6.00 மணி தொடக்கம் மாலை 5.30 வரை வகுப்புக்கள் மற்றும்
பரீட்சைகளை நடாத்துவதாகவும் இதன் காரணமாக பிள்ளைகள் நோன்புடன் மயக்கமுற்ற நிலைமையில் சோர்வடைந்து வீடுகளுக்கு வந்து சேருவதாகவும், இதனால்
இரவு வேளைகளில் மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு பிள்ளைகள் சிரமப்படுவதாக பெற்றோர்கள் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் சம்மேளனத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனைக் கருத்திற்கொண்டும், மாணவர்கள் மார்க்க நடவடிக்கையில் ஈடுபடுவதில் உள்ள இடர்பாடுகளைக் கருத்திற்கொண்டுமே, தனியார் கல்வி நிலையங்கள் மாணவர்களுக்கு
விடுமுறை வழங்க வேண்டும் என நகர சபை செயலாளர் அறிவித்துள்ளார்.