பண்டாரவளை, பூனாகலை – கபரகல தோட்டத்தில் மண்சரிவு: அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்த பணிப்பு

0
133

பண்டாரவளை, பூனாகலை – கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடன் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், மண்சரிவு சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து தமக்கு விரிவானதொரு அறிக்கையை முன்வைக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அப்பகுதியில் மண்சரிவு ஏற்படக்கூடிய ஏனைய இடங்கள் இருப்பின், அங்கு மக்கள் வாழ்வார்களாயின், அவர்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தோட்ட நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காடியுள்ளார்.

மக்கள் தொடர்பில் அசமந்தமாக தோட்ட நிர்வாகம் செயற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.