நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை இன்று காலை 4.00 மணிக்கு நீக்கப்பட்டு இன்று இரவு 11.00 மணிக்கு அமுல்ப்படுத்தப்படவுள்ள நிலையில் கொரோனா செயலணி விடுத்துள்ள பயண அறிவுறுத்தல்களை மீறுவோரை கண்டறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இன்று 19 மணி நேர பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தத.
அத்துடன் கொரோனா செயலணி மூலம் இன்றைய தினம் பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய போக்குவரத்து முறைகள் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதனை மீறுவோரை கண்டறியும் வகையிலான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்தனர்.
இதன்போது தேவையற்ற முறையில் வீடுகளை விட்டு வெளிவந்தோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்ததுடன் சிலர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இன்றைய தினம் பயணத்தடை பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்கொள்வனவுக்கு நீக்கப்பட்டிருந்த நிலையில் சில பகுதிகளில் அதிகளவான மக்கள் நடமாடியதை காணமுடிந்தது.
மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் பொருட்களை முண்டியடித்துக்கொள்வனவு செய்ததையும் காணமுடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 48க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள அதேவேளையில் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 12 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
இந்நிலையில் இன்றைய தினம் பொதுமக்களின் செயற்பாடு கொரனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் என சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
இன்றைய தினம் பொதுமக்களின் நடமாட்டத்தினையும் போக்குவரத்தையும் குறைத்துக்கொள்ளுமாறு பொலிஸாரால் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருந்தது.