வவுனியாவில் கடந்த மாதம் 24ஆம் திகதி மினி சூறாவளியுடன் கூடிய கடும் மழையினால் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்தன.
வவுனியா மாவட்ட செயலக வாயிலில் அமைந்துள்ள மரத்தின் பாரிய கிளை ஒன்று மின்சார இணைப்பின் மீது முறிந்து வீழ்ந்தது.
சூறாவளி வீசி 20 நாட்கள் கடக்கின்ற நிலையிலும், குறித்த மரக்கிளை அகற்றப்படாமையினால் அவ்வீதியூடாக பயணிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதி பொதுமக்களின் நடைபாதையாக இருப்பதுடன், மாவட்ட செயலகம், பொது வைத்தியசாலை என்பன அருகில் இருப்பதால் அதிகமான பொதுமக்கள் பயன்படுத்தும் ஒரு இடமாக காணப்படுகின்றது.
அத்துடன் மரக்கிளை மின்சார இணைப்பின் மீது வீழ்ந்துள்ளமையால், அது அறுந்து விழும் நிலையும் ஏற்ப்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்ப்படுவதற்கு முன்னர் குறித்த மரக்கிளையை உடனடியாக அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.