முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டு ஒரு வருடம் நிறைவுபெற்றுள்ள நிலையில் ஆண்டவன் தனது மகனை கொலைசெய்தவனை காட்டிக்கொடுத்துள்ளதாக கொல்லப்பட்ட இளைஞனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
2021-06-22அன்று பாலசுந்தரம் என்னும் இளைஞன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த படுகொலை தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தபோதிலும் இதுவரையில் எந்தவித நீதி விசாரணையும் இன்றி வழக்குகள் முன்கொண்டுசெல்லப்படும் நிலையில் தனது மகனுக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் சகோரரான மயூரன் என்பவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினால் தனது மகன் படுகொலைசெய்யப்பட்டதான குற்றசாட்டுகளை முன்வைத்துவந்தனர்.
இந்நிலையில் இன்று படுகொலைசெய்யப்பட்ட பாலசுந்தரத்தின் ஓராண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் நேற்று மாலை படுகொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக கொல்லப்பட்டவரின் பெற்றோரால் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் சகோதரனான சதாசிவம் மயூரன் இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில் தமது மகன் படுகொலைசெய்யப்பட்டு ஓராண்டு நிறைவதற்கள் தமது மகனை கொலைசெய்தவர்கள் வெளிக்காட்டப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்னர்.
இதனிடையே, நேற்று மாலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்றிக்கு முன்பாக பாலசுந்தரத்தின் உருவப்படம் வைத்து சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பாலசுந்தரத்தின் பெற்றோர் வீதியில் அழுதுபுலம்பி தமது கவலைகளையும் வெளிப்படுத்தினார்கள்.