ஈழத்தின் பிரபல வயலின் மேதை, சுருதிவேந்தன் அம்பலவாணர் ஜெயராமன் காலமானார்.
அம்பலவாணர் ஜெயராமன் 1959ம் ஆண்டு 8ம் மாதம் 29ம் திகதி பிறந்தார்.
இவர் யாழ்ப்பாணம் கலட்டி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியிலும்
கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் கற்றார்.
தனது ஒன்பதாவது வயதிலிருந்து பிரபல வயலின் வித்துவான் எஸ். சர்வேஸ்வர சர்மாவிடம் முறைப்படி வயலின் இசையைக் கற்றுக்கொண்ட இவர்,
வட இலங்கை சங்கீத சபைப் பாடத்திட்டத்திற்கு அமைய ஆசிரியர் தரம் வரை வயலின் இசையைப் பயின்றுள்ளார்.
இவரது முதலாவது தனி வயலின் இசைக் கச்சேரி வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் பன்னிரண்டு வயதில் அரங்கேற்றப்பட்டது.
கர்நாடக சங்கீத இசை நிகழ்வு, ஆலயங்கள், கலைவிழாக்கள், இசை நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள், நடன நிகழ்வுகள், நாடக நிகழ்வுகள் எனப் பல நிகழ்ச்சிகளில்
வயலின் இசையைப் பக்க வாத்தியமாக இசைத்து வந்தவர்.
இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் அமைச்சு 2003 ஆம் ஆண்டு இரண்டாவது உலக மகாநாட்டு நிகழ்வின்போது இவரைப் பாராட்டிச் சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் கௌரவித்துள்ளது.