பிரான்சில் நிலவும் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தான் காரணம் என தீவிர வலதுசாரித் தலைவர் மரின் லூ பென் குற்றம்சாட்டியுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தீவிர இடதுசாரிகள் கூட்டணியும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் கூட்டணியும் ஆட்சி அமைக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.இந்நிலையில் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் அது நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும், கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மக்ரோன் கூட்டணி அல்லது இடதுசாரிகள் அணி எவ்வாறேனும் ஆட்சிக்கு வரும் என்றால், வலுவான நிலையில் இருக்கும் தீவிர வலதுசாரிகளால் நம்பிக்கை வாக்கெடுப்பு முன்னெடுக்க கோரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே நாட்டின் மொத்த நெருக்கடிக்கும் காரணம் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் என வலதுசாரித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டின் பிரதமர் எந்த நிலையில் இருந்து வருவார் என்பதை யாராலும் அறிய முடியாத நிலையில் இன்று நாம் புதைகுழியில் சிக்கிக் கொண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டுக்காக என்ன கொள்கை பின்பற்றப்படும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.