பேருந்துகளில் இலத்திரனியல் கட்டண முறைமை!

0
113

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கு, இலத்திரனியல் அட்டை அல்லது கியூ.ஆர் குறியீட்டு முறைமை மூலமான கட்டண முறையை அறிமுகப்படுத்த, போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

‘பேருந்துகள் மூலம், நாளொன்றுக்கு 10 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகின்றது. பயணச்சீட்டுகளுக்கு பணம் செலுத்துவதற்கு, இலத்திரனியல் அட்டை அல்லது கியூ.ஆர் குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு, போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இத்திட்டம் தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபையினால், இணையத்தளத்தில் பணம் செலுத்தும் முறைமை தொடர்பில் திட்டமிடப்பட்டுள்ளது. சில பேருந்து சாரதிகள் அல்லது நடத்துநர்களால், அன்றைய மொத்த வருமானம், அந்தந்த டிப்போக்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால், ஒரு டிப்போவுக்கு, ஒரு நாளில் சுமார் ஒரு இலட்சம் ரூபா நட்டம் ஏற்படுகின்றது. இதனால், இலத்திரனியல் அட்டை அல்லது கியூ.ஆர் குறியீட்டு முறைமையுடன் கூடிய பணம் செலுத்தும் முறை, சுமார் இரண்டு மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும். இந்த முயற்சியானது, 2023 நவம்பர் மாதம், இலங்கை போக்குவரத்து சபைக்காக அறிவிக்கப்பட்ட, அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சியின் ஒரு பகுதியாகும். இது 2024 இல் நடைமுறைப்படுத்தப்படும்’ என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.