பொதுஜன பெரமுனவால் ஆதரிக்கப்படும் வேட்பாளரே நாட்டின் அடுத்த ஜனாதிபதி: பிரசன்ன

0
117

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறீலங்கா பொதுஜன பெரமுனவால் ஆதரிக்கப்படும் வேட்பாளர் நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி ஒரு கொலை கலாசாரத்தை கொண்ட கட்சி எனத்தெரிவித்த அமைச்சர், மொட்டு ஒருபோதும் கொலைகார கட்சி அல்ல எனவும், நாங்கள் நாட்டுக்காக உழைத்த கட்சி எனவும் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட போராட்டத்தால் சில பின்னடைவுகளைச் சந்தித்தோம். போராட்டத்துடன் சேர்த்து 69 இலட்சம் எடுத்த எமது ஜனாதிபதி பதவி விலகினார்.

மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தைக் கொண்டிருந்த நமது பிரதமர் தலைமையிலான அரசு பதவி விலகியது.

எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. நாங்கள் அச்சுறுத்தப்பட்டோம். ஆனால், இப்போது நாங்கள் பலமாக இருக்கிறோம்.

மகிந்த தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர் மீண்டும் வருவார் என நாம் நினைக்கவில்லை. அவருக்காக நாடு முழுவதும் சென்றோம். மகிந்த காற்றை உருவாக்கினோம்.

அதற்கான ஆற்றலை கம்பஹா எமக்கு வழங்கியது. 2018 தேர்தல் நடந்தபோது அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலில் நில்லுங்கள் என்றார்கள்.

தனியாகக் கேட்போம் என்று நான் பகிரங்கமாகச் சொன்னேன். பின்னர் எல்லாரும் முடிவு செய்து தனியாகக் கேட்டோம். நாங்கள் வெற்றி பெற்றோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நான் ஒருபோதும் குறை கூற மாட்டேன். மகிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டை போரிலிருந்து காப்பாற்றி நாட்டிற்கு பலத்தை கொடுத்தது போல், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நாட்டையும் எமது மக்களையும் கோவிட் தொற்றிலிருந்து காப்பாற்றினார்.

உலகப் பொருளாதாரம், இயற்கைச் சீற்றங்கள், கொரோனா தொற்று போன்ற காரணங்களால் நமது நாட்டின் பொருளாதாரம் சரிந்தது.

ஜே.வி.பி ஒரு கொலைகார கலாசாரம் கொண்ட கட்சி. மக்களைக் கொலை செய்த கட்சி. போராட்டத்தின்போது கம்பஹாவிலேயே பெரும்பாலான வீடுகள் எரிந்து சேதம் ஏற்பட்டது.

அதிலும் அதிக சேதம் மினுவாங்கொடையிலேயே ஏற்பட்டது. எங்களின் 13 வீடுகள் எரிக்கப்பட்டன.
மொட்டின் சக்தியை உடைக்க எங்களை அடித்தார்கள். நாங்கள் கடினமான காலங்களை கடந்து வந்துள்ளோம்.

இவை எமக்கு சவால்கள் அல்ல. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடித்து வீழ்த்துவது எங்களுக்குப் பெரிய விடயம் அல்ல.

ஆனால், நாங்கள் அவர்களை அடிக்கப் போகவில்லை. எனது வீட்டை எரிக்க வந்தவர்களில் 6 பேர் இதுவரை உயிரிழந்தனர். இயற்கை அவர்களை தண்டிக்கும்.

நாங்கள் மக்களைக் கொல்லும் கட்சி அல்ல. நாங்கள் நாட்டுக்காக உழைத்த கட்சி என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.