பொலிஸார் தாக்கி பொய் வழக்குத் தாக்கல் செய்தனர் – வியாழேந்திரன்

0
816

தற்கொலைக் குண்டுதாரியின் உடல்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்தற்கு எதிராக பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தபோது எங்களைத் தாக்கிய பொலிஸார் எம் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி நீதிமன்றில் வழக்குத் தாக்குதல் செய்தனர் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலைக் குண்டுதாரியின் உடல்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்தின் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராகத்தொடரப்பட்ட வழக்கு இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில்; எடுக்கப்பட்டது.

இதில் அமைச்சர் உள்ளிட்ட 5 பேரும் ஆஜராகினர். இதன்போது இந்த வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.

இதன் பின்னர் வியாழேந்திரன் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்:

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த 2019 ஏப்ரல் மாத உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர். அந்தக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சோந்த தற்கொலைக் குண்டுதாரியான ஆசாத்தின் உடல்பாகத்தை கள்ளியன்காடு இந்து மயானத்தில் பொலிஸார் புதைத்தனர்.

இந்து மயானத்தில் எமது சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கொலை செய்த பயங்கரவாதியை புதைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது மக்களின் பிரதிநிதிகளான நாங்கள் அவ்விடத்துக்குச் சென்று புதைக்கப்பட்ட அந்த உடல்பாகத்தை தோண்டி எடுத்குமாறு மக்களுடன் சேர்ந்து குரல் கொடுத்தவேளை பொலிஸார் எங்களை மிக மோசமாகத் தாக்கினர்.

அதனடிப்படையில் செல்வி மனோகரன், அனோஜன், சுசிலா, றொஸ்மன் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மீதும் என்னையும் சேர்த்து மொத்தமாக 5 பேருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்குதல் செய்தனர்.

இருந்தும் மக்கள் போராட்டம் வெற்றி பெற்றது. அந்தப் போராட்டத்தின் பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் புதைக்கப்பட்ட உடல்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டு காத்தான்குடி பிரதேசத்தில் புதைக்கப்பட்டது.

ஆனால் அந்தப் போராட்டத்தில் மக்களுடன் இணைந்து செயல்பட்டதற்காக தொடர்ந்து நீதிமன்ற வழக்குக்கு வந்து செல்கின்றோம்.

அதேவேளை பொலிஸார் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி வழக்குத் தொடர்ந்துள்ளனர். எது எவ்வாறாயினும் நீதி தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது எனத் தெரிவித்தார்.