முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் மீது தாம் விதித்ததை போன்று ஜி-7 நாடுகளும் பொருளாதார தடைகளை விதிக்க ஊக்குவிக்கும் வகையில் கனடா செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரி 10ஆம் திகதி இந்த நான்கு பேர் மீதும் கனடா தடைகளை விதித்தது. 1983 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான மொத்த மனித உரிமை மீறல்கள் தொடர்பிலேயே இந்த தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனிஜொலி, இந்த தடையை ஜி-7 நாடுகளும் பின்பற்றவேண்டும் என்பதற்காக செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். கனடா எப்போதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகச் செயல்படுகிறது என்ற அடிப்படையிலேயே, ராஜபக்ஷ சகோதரர்கள் மற்றும் மற்றவர்கள் மீது கடுமையான தடைகளை விதிக்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜி-7 நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை வலியுறுத்துவதே தமது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்துக்கு இது தான் பிரச்னை என்று தெரியும். எனவே சமாதானத்தை அடைய, உண்மையைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதை அவர்கள் அறிந்துள்ளார்கள் எனவும் கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜொலி தெரிவித்துள்ளார்.