மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில் ‘போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நேற்று இடம்பெற்றது.
மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழிக்கும் நோக்கில் கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம், கூழாவடி கலைவாணி வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகி, பிரதான வீதி ஊடாக கூழாவடி சந்திவரை சென்று மீண்டும் பாடசாலை வளாகத்தை வந்தடைந்தது.
அருவி பெண்கள் வலையமைப்பினால் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான வீதியோர நாடகம் ஒன்றும அரங்கேற்றப்பட்டது.
அருவி பெண்கள் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மயூரி ஜனனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக கிராம மக்களிடையே விழிப்புணர்வு கலந்துரையாடலொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.
விழிப்புணர்வு நிகழ்வின் நிறைவில், கூழாவடி கலைவாணி வித்தியாலய வளாகத்தில் சிரமதான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.