கத்தோலிக்க திருச்சபையின் திருபாலத்துவ திருப்பாலர் மறைப்பரப்பு ஞாயிறு திருப்பலி இன்று மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அனைத்து கத்தோலிக்க திரு அவைகளில் சிறப்பிக்கப்பட்டது . கத்தோலிக்க திருச்சபையினால் 1922 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கான ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டு கத்தோலிக்க திருச்சபையில், சிறுவர்களுக்கென திருபாலத்துவ சபை ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், கத்தோலிக்க திருச்சபை இன்று விசேட விதமாக சிறுவர்களை முன்னிலைப்படுத்தி
திருபாலத்துவ சபையின் திருப்பாலர் மறைப்பரப்பு ஞாயிறு விழாவினை சிறப்பித்தது.
மட்டக்களப்பு மறை மாவட்ட அபோஸ்தலிக்க பரிபாலகர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகையின் வழிகாட்டலில், ‘நல் உலகத்திற்கு எமது பிள்ளைகளை வழி நடத்துவோம்’ எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க திரு அவைகளில் சிறுவர்களுக்காக விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு டச்பார் புனித இன்னாசியார் ஆலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட திருபாலத்துவ சபை இயக்குனர் அருட்பணி நிகஸ்டன் பீட்டஸ் அடிகளார் தலைமையில் ஆலய பங்கு தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் இணைந்து திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர். அருட் சகோதரிகள், மறைக்கல்வி ஆசிரியர்கள்,மறைக்கல்வி மாணவர்கள், பங்கு மக்கள் என பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்