வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ எனும் கோரிக்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் சுழற்சி முறையாக நடைபெற்றுவரும் 100 நாட்கள் செயல்முனைவின் 05ம் நாள் கவனயீர்ப்பு நடவடிக்கை இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகர் காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றது
‘நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம்’ ‘வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும்’ ’13 வது திருத்தச்சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது’ என்ற கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் எனும் கவனயீர்ப்பு நடவடிக்கையே இன்றைய தினம் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது .
எமக்கான உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கும், நட்பு நாடான இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்திக்கொண்டு வடக்கு கிழக்கு வாழ் மக்களாக தமது சாத்வீகமாகன, ஜனநாயகமான நூறுநாட்கள் செயல்முனைவை ஆவணி மாதம் முதலாம் திகதி முதல் முன்னெடுத்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு இலங்கை எனும் அமைப்பின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட 100 நாட்கள் செயல்முனைவில் மட்டக்களப்பு மாவட்ட கிராம மட்ட அடிப்படை அமைப்புகள்,விவசாய, மீனவ சங்கங்கள்,பெண்கள் அமைப்புகள் மாற்று மாணவர் அமைப்புகளுடன் சிவில் சமூக அமைப்புகளும் கலந்துகொண்டன ,
இதன்போது மக்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் , விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பகிரப்பட்டதுடன் , வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ எனும் கோரிக்கையின் அடங்கிய மகஜர் ஒன்று மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எ .எல் .இஸதீனிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது