மட்டக்களப்பு ஆரையம்பதி பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பெற்றோலை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்து பொது மக்கள் சிலர் நேற்றிரவு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு வந்த பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் பெற்றோலை பதுக்கி வைத்திருப்பதாகவும் அதனை பொது மக்களுக்கு விநியோகிக்குமாறும் கூறினர்.
எனினும், ஆரையம்பதி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில்
பெற்றோல் இல்லையெனவும் பெற்றோல் முடிந்து விட்டதாகவும் ஆரையம்பதி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கூறினார்.
இதனையடுத்து பெற்றோல் பதுக்கி வைத்திருப்பதாகவும் தமக்கு தேவையானோருக்கு ஆரையம்பதி பல நோக்கு கூட்டுறவு சங்க நிருவாகம் மறைமுகமாக பெற்றோல் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த பகுதியில் குழப்பம் ஏற்பட்டதுடன் தொடர்ந்து பொலிசாரும் இராணுவத்தினரும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
நீண்ட நேரம் காத்திருந்த மக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படாது தொடர்ந்து பொலிஸாரும் இராணுவத்தினரும் அங்கிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.