மட்டக்களப்பு தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.
கிழக்கிலங்கையின் மீன்பாடும் தேனாட்டின் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் இரண்டு நூற்றாண்டு பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க கத்தோலிக்க திரு அவையைக் கொண்ட மட்டக்களப்பு தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயத்தின் 204 வது வருடாந்த திருவிழா இன்று இடம்பெற்ற திருவிழா கூட்டுத் திருப்பலியுடன் கொடியிறக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டுக்கான ஆலய திருவிழா நிறைவுபெற்றது.
கடந்த 07 ஆம் திகதி பங்குத்தந்தை மொரிசன் அடிகளாரின் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழா கடந்த ஒன்பது தினங்கள் நவநாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு நேற்று மாலை புனிதரின் திருச்சொரூப பவனியும் தொடர்ந்து இன்றையதினம் மறைமாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட கூட்டுத்திருப்பலியில் பிள்ளைகளுக்கான உறுதிபூசுதல்,நற்கருணை வழங்கப்பட்டு திருவிழா சிறப்பாக நிறைவுபெற்றது
ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இடம்பெற்ற திருவிழா திருப்பலியில் கடந்த 12 ஆம் திகதி தனது பிறந்த நாளை கொண்டாடிய மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரும்,தன்னாமுனை மண்ணின் மைதானுமாகிய ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகைக்கு தன்னாமுனை பங்கு மக்களின் ஏற்பாட்டில் பிறந்தநாள் கேக் வெற்றப்பட்டு ஆயரின் பிறந்த நாள் சிறப்பிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து ஆலயத்தை சுற்றிய புனிதரின் திருச்சுரூப பவனியும் தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற புனிதரின் திருச்சுரூப ஆசீருடன் ஆலய திருவிழா கொடியிறக்கப்பட்டு வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது.
இந்த திருவிழா திருப்பலியில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்து வருகை தந்த பெருமளவான மக்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது .