மட்டு. பாலமீன்மடு – திராய்மடு முருகன்
ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்

0
473

மட்டக்களப்பு பாலமீன்மடு –திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இந்துமா சமுத்திரத்தில் இடம்பெற்ற தீர்த்த உற்சவத்துடன் இன்று நிறைவுபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு பாலமீன்மடு –திராய்மடு கிராமத்தில் பல தசாப்த வருடங்களுக்கு முன் வணக்கத்திற்குரிய நல்லதம்பி சடையப்பா சுவாமிகள் தோற்றிவித்த அருள்மிகு திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழா கடந்த 02ஆம் திகதி கும்பம் வைத்தலுடன் ஆரம்பமானது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பிரதீபன் சர்மா தலைமையில் ஒன்பது தினங்கள் தினமும் விசேட தீபாராதனை பூஜைகளுடன் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று தொடர்ந்து சுவாமி உள்வீதி , வெளி வீதியுலா வருதல் இடம்பெற்றது .

இன்று காலை விநாயகர் வழிபாடுகளுடன் விசேட அபிசேக தீபாராதனை இடம்பெற்று தொடர்ந்து வசந்த மண்டப பூஜையுடன் சுவாமி முருகப்பெருமான் தீர்த்தோற்சவத்திற்காக ஆலயத்திலிருந்து புறப்பட்டு அடியார்கள் புடை சூழ வேத,நாத,மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசத்துடன் இந்து மா சமுத்திரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

தீர்த்தோற்சவ நிகழ்வினை தொடர்ந்து சுவாமி வீதி உலா சென்று ஆலயத்தை வந்தடைந்ததும் விசேட மகேஸ்வர பூசைகள் இடம்பெற்று அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழா நிறைவு பெற்றது.