‘இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ என்ற தொனிப் பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் நடைபெற்றது.வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் நெறிப்படுத்துனர் கண்டுமணி லவகுசராசா தலைமையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் சுழற்சி முறையில் 100 நாட்கள் செயல் முனைவு போராட்டமானது மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இதன் 29 ஆவது நாள் செயல் முனைவான போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கதிரவெளி கடற்கரையில் நேற்று நடைபெற்றது.
நேற்று காலை தீ பந்தம் ஏற்றி கதிரவெளி கடற்கரையில் ஒன்று கூடிய மக்கள் தங்களது பிரதேசத்தில் இடம்பெறும் பல்வேறுபட்ட பிரச்சினைள் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.இல்மனைட் கணிய மணல் அகழ்வு தொழிற்சாலை அமைப்பது, தொல்பொருள் அகழ்வு, இறால், மீன்வளர்ப்பு நடவடிக்கை, சுருக்கு வலை மீன்பிடி நடவடிக்கை,சட்டவிரோத மண் அகழ்வு,காணமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் என மக்களின் பிரச்சினைகளை அடையாளம் காண்;டு அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டது.
தமது கோரிக்கை அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ‘நடமாடுவது எங்கள் சுதந்திரம் ஒன்று கூடுவது எங்கள சுதந்திரம’;, ‘பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை’, போன்ற
கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கை அடங்கிய விடயங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.