மண்சரிவில் சிக்கிய மூவரில் ஒருவரின் சடலம் மீட்பு

0
419

இரத்தினப்புரி அயகம, எல்ல தேவாலயத்துக்கு அருகில், இன்று(4) காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போன மூவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

16 வயது சிறுமியின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேற்படிப் பகுதியில், குடியிருப்பொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 16 வயது யுவதியும் 72 வயது நபரும் காணாமல் போயுள்ளனர்.

வீதியில் சென்ற ஒருவரும் மண்மேடுக்குள் சிக்குண்டு இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன மூவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.

இதேவேளை கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

100 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழை பெய்யும் பட்சத்தில் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு மேற்படிப் பிரதேச மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.